tamilnadu

img

சோவியத் புரட்சியின் சாதனைகளும் படிப்பினைகளும்...

1917-ஆம் ஆண்டு நவம்பர் ஏழாம் தேதி தோழர்லெனின் தலைமையில் தொழிலாளி வர்க்கமும் ஏனைய உழைப்பாளிகளும் இணைந்து சோசலிச புரட்சியை நடத்தினர். இந்த மகத்தான புரட்சி உலகமெங்கும் உழைக்கும் மக்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டியது. அதே சமயத்தில் முதலாளித்துவ சக்திகள் நடுங்கினர். புரட்சியை அழித்திட முனைந்தனர்.

உலகில் முதல் முறையாக மனிதனை மனிதன் சுரண்டுவது ஒழிக்கப்பட்டது. முதல் முறையாக அரசு அதிகாரத்தை உழைக்கும் மக்கள் கைப்பற்றினர். அன்றைக்கு காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய மக்களுக்கு சோவியத் யூனியன் ஆதரவினை நல்கியது. இந்தியா உட்பட புதிதாக விடுதலையடைந்த தேசங்களுக்கு சொந்தக்காலில் நிற்க உதவிசெய்தது. உலக பாசிச சக்திகளை தோற்கடித்தது. பனிப்போரை தடுத்து உலக சமாதானத்தை உத்தரவாதம் செய்தது.எனினும் 1990களில் சோவியத் யூனியன் சோசலிசம் பின்னடைவை சந்தித்தது.முதலாளித்துவ சக்திகள் சோசலிசத்திற்கு மரண சாசனம் வாசித்தனர். ஆனால்30 ஆண்டுகளுக்குப் பிறகு முதலாளித்துவம்தான் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. மாறாக சோஷலிச சக்திகள் படிப்பினைகளை கற்றுக்கொண்டு முன்னேறுவதற்கு தயாராக உள்ளன.

புதிய மனிதன்
சுரண்டலை ஒழித்த சோவியத் புரட்சி புதிய மனிதனை உருவாக்கியது. சமூக வாழ்வுதான் சமூக சிந்தனையை விளைவிக்கிறது என்பது பொருள்முதல்வாதத்தின் அரிச்சுவடி. சோசலிச சமூக வாழ்வு புதிய சிந்தனையை கொண்டபுதிய மனிதனை படைத்தது. அந்த புதிய மனிதன் சோசலிசத்தை பாதுகாக்க முதலாளித்துவ சக்திகள் உருவாக்கிய உள்நாட்டுப் போரை முறியடித்தான். அந்த புதிய மனிதன் ஆலை உற்பத்தியை பன்மடங்கு உயர்த்தி அமெரிக்காவை பின்னுக்கு தள்ளினான். விவசாய உற்பத்தியில் புதிய சாதனைகளைப் படைத்தான். 1936ஆம்  ஆண்டு கடைசி வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பூட்டுப் போட்டான். இரண்டாம் உலகப்போரில் இரண்டு கோடி உயிர்களை பெரும் தியாகம் செய்து  பாசிச சக்திகளை தோற்கடித்து உலகை காப்பாற்றினான். போரினால் முற்றிலும் அழிந்து போன சோவியத் பொருளாதாரத்தை பீனிக்ஸ் பறவை போல மீண்டும் உயிர்ப்பிக்க வைத்தான். 

அனைவருக்கும் உணவு/உடை/இருப்பிடம்/கல்வி/மருத்துவம் ஆகியவற்றை உத்தரவாதப்படுத்தினான். யூரி ககாரின் மற்றும் வாலண்டினா வடிவத்தில் முதல் ஆண் மற்றும் முதல் பெண்ணாக விண்வெளியில் பறந்த வீரர்களை உருவாக்கினான். சோவியத் யூனியனை அமெரிக்காவுக்கு இணையான வல்லரசாக உருவாக்கி சாதனை படைத்தான். தன் தேசத்து உழைப்பாளிகளும் கம்யூனிசம் பக்கம் சாய்ந்துவிடுவார்களோ எனும் பயத்தை உலக முதலாளித்துவ சக்திகளுக்கு உருவாக்கினான். அதனாலேயே தங்கள் நாட்டு உழைப்பாளிகளுக்கு பல சலுகைகளை முதலாளித்துவ தேசங்கள் தர வேண்டிய அவசியம் உருவானது. 

ஆயினும் 1991ஆம் ஆண்டு சோவியத் சோசலிச பரிசோதனை முயற்சி முடிவுக்கு வந்தது. இந்த பின்னடைவு உலகமெங்கும் உள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கும் முற்போக்காளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் கொடுத்தது. 21ஆம் நூற்றாண்டில் சோசலிசம் நிர்மாணிக்க முயலும் அனைவருக்கும் இந்த பின்னடைவின் மூலம் கற்றுகொள்வதற்கு நிறைய படிப்பினைகள் உள்ளன.

உற்பத்தி சக்திகள் வளர்ச்சியில் தேக்கம்
சோவியத் சமூகத்தில் சோசலிச உற்பத்திஉறவுகள் உற்பத்தி சக்திகளின் பிரம்மாண்டமான வளர்ச்சியை சாத்தியமாக்கின. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் புதிய சாதனைகள் படைக்கப்பட்டன. தொழில் மற்றும் விவசாய உற்பத்தி இரண்டிலுமே உற்பத்தித் திறன் பன்மடங்கு உயர்ந்தது. இதன் விளைவாக அதிகமான உபரி மதிப்புஉருவானது. சோசலிச அரசாங்கம் அதனை அனைத்து மக்களின் சமூக நன்மைக்காக பயன்படுத்தியதால் உணவு/உடை/மருத்துவம்/கல்வி அனைத்தும் இலவசமாக அல்லதுகுறைந்த விலையில் தரமுடிந்தது. இந்தியா போன்ற புதிதாக விடுதலை அடைந்த தேசங்களுக்கும் சோவியத் யூனியன் தாராளமாக தொழில்நுட்ப மற்றும் ராணுவ உதவிகளை செய்வது சாத்தியமாயிற்று.ஆயினும் 1970களின் தொடக்கத்தில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தேக்கத்தையும் 1980களில் பின்னடைவையும் சந்தித்தது. 1950களில் உச்சத்தை தொட்ட சோவியத்தின் தொழில்நுட்ப கருவிகள் காயலான் கடைக்கு உகந்ததாக மாறின. குறிப்பாக சில்லுப் புரட்சி எனப்படும் நவீன மின்னணுவியல் மற்றும் கணினித்துறையில் முதலாளித்துவம் முந்தியது. இதன் பொருள் என்ன? தொழில் மற்றும்விவசாயத்தில் தேக்கம்! இதன் விளைவாக சோசலிச சமூகத்திற்கு பயன்பட வேண்டிய உபரி மதிப்பு கடும் சரிவு. முதல் முறையாக இரண்டு ஐந்தாண்டு திட்டங்களின் இலக்குகள் பூர்த்தியாகாமல் தவறின. இது ஆழ்ந்தபொருளாதார நெருக்கடிகளையும் மக்களிடையே அதிருப்தியையும் விளைவித்தது.முதலாளித்துவத்துடன் வாழ்வா சாவா போராட்டம் நடக்கும் பொழுது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் பின்தங்கினால் அது முடிவில் சோசலிச உற்பத்தி முறைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பது சோவியத் யூனியனின் வீழ்ச்சி கற்றுத்தரும் முக்கிய படிப்பினையாகும்.

திட்டமிட்ட பொருளாதாரமா?  சந்தைப் பொருளாதாரமா?
சோசலிச உற்பத்தி முறையின் அடிப்படைஅம்சம் திட்டமிடப்பட்ட பொருளாதாரம் ஆகும்.அதே சமயத்தில் சந்தைப் பொருளாதாரத்திற்கும் ஒரு முக்கிய பங்கு இருக்கும். சரக்குஉற்பத்தி இருக்கும் வரை சந்தை என்ற பொருளாதார அம்சம் தொடரும். சந்தை சக்திகள் இருக்க வேண்டுமா வேண்டாமா என்பது அல்ல பிரச்சனை. எது அடிப்படையானது? திட்டமிடலா அல்லது சந்தையா என்பதுதான் பிரச்சனை. சோசலிச உற்பத்தி முறையில் திட்டமிட்ட பொருளாதாரம் என்பது தான் அடிப்படையானது. அதற்கு உட்பட்டு சந்தை சக்திகள் செயல்படவேண்டும்.சோவியத் யூனியனில் நீண்ட நாட்களாகசந்தையின் முக்கியத்துவம் உணரப்படவில்லை. விளைவு? அமெரிக்காவுக்கு முன்பாகவே விண்வெளிக்கு விண்கலம் அனுப்பிய தேசத்தில் மக்களுக்கு தரமான இரு சக்கர வாகனங்கள் அல்லது நவீன வீட்டு உபயோக நுகர்வு பொருட்கள் உற்பத்தி செய்யப்படவில்லை. மக்களின் நுகர்வு தேவைகள் என்ன என்பதை அறிய எந்த திட்டமும் இல்லை. இது மக்களிடையே அதிருப்தியை விளைவித்தது. 
சந்தையின் முக்கியத்துவம் உணரப்பட்ட பொழுது சோசலிசப் பொருளாதாரத்தை சந்தை பொருளாதாரமாக மாற்றுவதற்கான முயற்சிகள் கோர்பச்சேவ் காலத்தில் நடந்தன. சந்தை பொருளாதாரத்தை தலைமை பீடத்தில்
அமர வைப்பது சோசலிசத்திற்கு முற்றிலும் முரண்பட்டதாகும். திட்டமிடப்பட்ட பொருளாதாரத்திற்கு கட்டுப்பட்டு சந்தை சக்திகளை செயல்பட அனுமதிப்பது என்பதே பொருத்தமான அணுகுமுறையாகும். சோவியத் யூனியனில்உருவான இந்த தவறு சோசலிச பொருளாதாரத்திற்கு பெரிய பலவீனத்தை உருவாக்கியது.

தனிநபர் சுதந்திரம்
சோசலிச சோவியத் அரசாங்கம் அதுவரை மனிதகுலம் கண்டிராத பல உரிமைகளை உழைப்பாளி மக்களுக்கு கொடுத்தது.முதலாளித்துவ அரசியல் சட்டம் உரிமைகளை தருகிறது. ஆனால் அந்த உரிமைகளை பயன்படுத்த சூழல்களை உருவாக்குவது இல்லை. முதலாளித்துவ உரிமைகள் பெயரளவுக்கான உரிமைகளாகவே இருக்கும். ஆனால் சோசலிச அரசியல் சட்டம் முதலாளித்துவம் தரத்துணியாத உரிமைகளை தந்தது மட்டுமல்ல; அந்த உரிமைகளை பயன்படுத்த அனைத்து வாய்ப்புகளையும் திறந்துவிட்டது. வேலை உரிமை/கல்வி உரிமை/மருத்துவ வசதி உரிமை/ஓய்வு உரிமை/முதிய வயதினர் மற்றும் உடல் நலிந்தோர் பராமரிப்பு உரிமை/பாலின சமத்துவ உரிமை/அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவ உரிமை/மதவழிபாடு உரிமை/ மதத்தை துறக்கும் உரிமை போன்ற பல உரிமைகளை சோவியத் அரசியல் சட்டம் வழங்கியது. 1977ஆம் ஆண்டு திருத்தப்பட்ட அரசியல்சட்டம் வீடு உரிமையையும் அளித்தது. 

தொழிற்சாலைகளை நிர்வகிக்கும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தரப்பட்டது. பணிக்காலத்தில் உயிரிழக்கும் தொழிலாளியின் குடும்பத்துக்கு அந்த குடும்பத்திலிருந்து ஒருவர் பணிக்கு செல்லும்வரை அவர் ஈட்டிய இறுதி ஊதியம் உத்தரவாதப்படுத்தப்பட்டது. தொழிற்சங்க அனுமதி இல்லாமல் எந்த தொழிலாளியையும் வேலைநீக்கம் செய்ய இயலாது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 45முதல் 50% தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. திறமையாகச் செயல்படாத தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை திரும்பப்பெறும் உரிமை அளிக்கப்பட்டது. இப்படி பல உரிமைகளை சோவியத் அரசியல் சட்டம் அளித்தது.  

இவ்வளவு மகத்தான உரிமைகளை தந்த சோவியத் அரசியல் சட்டம் ஓரிரு முரண்பாடுகளையும் உள்ளடக்கியிருந்தது. நீதிபதிகள் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சோவியத் சமூகத்தில் புரக்குரேட்டர் ஜெனரல்(Procurator General) என்னும் ஒரு பதவிசகல அதிகாரங்களுடன் உருவாக்கப்பட்டது. இவர் எவரையும் கைது செய்யலாம்; சிறையில்அடைக்கலாம். சோவியத் நாடாளுமன்றத்தால் நியமிக்கப்படும் இவருக்கு 5 ஆண்டுகள் பதவி காலம். பல்வேறு மாநிலங்களில் இவர்புரக்குரேட்டர்களை நியமிக்கலாம். இவர்கள்ர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கோ அல்லது நாடாளுமன்ற அமைப்புகளுக்கோ கட்டுப்பட்டவர்கள் அல்ல. இத்தகைய ஒரு அமைப்பு இரண்டாம் உலகப் போரின் பொழுது இருந்தால் அதனை புரிந்து கொள்ளமுடியும். ஏனெனில் பாசிச சக்திகளுக்கு உதவிசெய்பவர்களை இது கட்டுப்படுத்த உதவும். ஆனால் போர் முடிந்த பின்னரும் கூட கடைசிவரை இந்தப் பதவி இருந்தது என்பது கடும் முரண்பாடு ஆகும். இந்த அமைப்பின் மூலம் ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டது சோசலிச ஜனநாயகத்தை சிதைவுக்கு உள்ளாக்கியது.

சுரண்டலிலிருந்து விடுதலை கிடைத்த காரணத்தாலேயே அனைத்துவித தனிநபர் சுதந்திரமும் உத்தரவாதப்பட்டுவிடும் எனும் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. தனிநபர் சுதந்திரம் செழுமைப்பட வலுவான அரசியல் சட்ட உத்தரவாதம் உருவாக்கப்பட வேண்டும் என்ற படிப்பினையை இந்த நிகழ்வுகள் முன்வைக்கின்றன.

கட்சியும் அரசும்
சோவியத் யூனியனில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் உழைப்பாளிகள் அனைவரும் சேர்ந்து சோசலிசப் புரட்சியை நடத்தினர். தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக  கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டது. புரட்சியின் போதும் அதற்கு பின்னரும்புரட்சியை உறுதிப்படுத்துவதிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு மிக மிக முக்கியமானதாகும். சோசலிசத்தை சீர்குலைக்க முதலில் உள்நாட்டுப் போரும் பின்னர் இரண்டாம் உலகப்போரும் சோவியத் யூனியன் மீது திணிக்கப்பட்டன. கடுமையான சவால்களை எதிர் கொண்டு வென்றதில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமைப் பாத்திரத்தை வகித்தது.

அதே சமயத்தில் இந்த ஆபத்துக்கள் நீங்கிய பிறகு கட்சிக்கும் சோவியத் அரசுக்கும் உள்ள உறவுகள் குறித்து சில தவறுகள் நிகழ்ந்தன. கட்சி வேறு; சோவியத் அரசு வேறு என்பது  உணரப்படவில்லை. சோவியத் யூனியனின் அரசியல் சட்டத்திலேயே கட்சியின் முன்னணி பாத்திரம் குறித்து வலுவாக குறிப்பிடப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத்துவம் அரசியல் சட்டத்தின் விதிகள் மூலம் பெறப்படுவது கூடாது. கட்சி தனது உறுப்பினர்கள் மூலம் மக்களிடையே செயல்படுதன் விளைவாக முன்னணிப் பாத்திரம் ஈட்ட வேண்டும். கட்சியின் தலைமைப் பாத்திரம் அரசியல் சட்டத்தில் இடம்பெற்றால் கட்சியின் நிலைபாடு குறித்து உறுப்பினர்கள் அல்லாதவர்கள் விமர்சனம்முன் வைக்க முடியுமா? அந்த விமர்சனத்துக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்குமா? இதுகுறித்து அரசியல் சட்டத்தில் அல்லது நடைமுறையில் எந்த தெளிவும் இல்லை.

கட்சிதான் அரசின் அனைத்து அம்சங்களையும் தீர்மானிக்கும் என்றால் சோவியத்நாடாளுமன்றத்தின் பணி என்ன?அரசு இயந்திரத்தின் பல்வேறு நிர்வாகப் பிரிவுகளின் பங்கு என்ன? எனும் கேள்விகள் எழுகின்றன. கட்சி அரசை வழிநடத்துகிறது எனில்அதன் பொருள் என்ன? கட்சியின் மத்தியக்குழு அல்லது அரசியல் தலைமைக்குழு அரசை வழிநடத்தும் என்று பொருள். இது சோசலிச ஜனநாயகத்தை சிதைத்தது. மக்களின் பரந்துபட்ட பங்கேற்பை தடுத்தது. சோசலிச சமூகத்தில் கட்சியின் வழிகாட்டுதல் பாத்திரம் மிக முக்கியமானது என்பதில் இரண்டாவது கருத்து இருக்க இயலாது. ஆனால் அதே சமயத்தில் அரசு என்பது கட்சி தான்; அரசுதான் கட்சி எனும் நிலை சோசலிச ஜனநாயகத்தை தடம்புரள வைத்தது. இதன் விளைவாக மக்கள் கட்சியிடமிருந்து அந்நியப்பட்டனர். 

இந்த பலவீனத்தை களைவது என்றபெயரால் கோர்பச்சேவ் காலத்தில் மகத்தானசோவியத் கம்யூனிஸ்ட் கட்சி நிராயுதபாணியாக்கப்பட்டு சீர்குலைக்கப்பட்டது. கட்சியின் மார்க்சிய - லெனினிய பரிசுத்தத் தன்மை
யை பாதுகாக்க இடைவிடாத சித்தாந்தப் போராட்டம் இல்லையெனில் மகத்தான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி கூட சிதைந்துவிடும் என்பது சோவியத் அனுபவம் கற்றுத்தரும் பாடம்!

மார்க்சிய-லெனினியக் கோட்பாடுகள் அடிப்படையில் செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சிஇல்லாமல் சோசலிச அல்லது ஜனநாயகப் புரட்சி சாத்தியமில்லை. புரட்சி வென்ற பிறகும் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டும் பங்கு தேவை. அதே சமயத்தில் சோசலிச சமூகத்தில் அரசு உழைக்கும் மக்களின் அரசாக இயங்க வேண்டும். கட்சியின் முன்னணி பாத்திரம் அதன் செயல்பாடுகள் மூலம் நிலைநாட்டப்பட வேண்டும். இது கம்யூனிஸ்ட்டுகள் உள்வாங்கிக்கொள்ள வேண்டிய முக்கிய படிப்பினை ஆகும். 

சோசலிசத்துக்கே எதிர்காலம்!
சோவியத் யூனியன் சிதைவு குறித்து ஆய்வுகள் தொடர்கின்றன. எனினும் ஒரு உண்மையை எவரும் மறுக்க முடியாது. மனிதகுலம் சந்திக்கும் பிரச்சனைகள் எதையும் முதலாளித்துவம் தீர்க்க முடியாது என்பதுசந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. சீனா/கியூபா/வியட்நாம் ஆகிய சோசலிசநாடுகள் சோவியத் யூனியனின் பின்னடைவிலிருந்து படிப்பினைகள் பெற்று முன்னேறிக் கொண்டுள்ளன. சீனா பெரும் சாதனை படைத்து அமெரிக்காவுக்கு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. 21ஆம் நூற்றாண்டு சோசலிசம் முன்னேற்றம் காண சோசலிச நாடுகளின் முயற்சிகள் வெல்வது மிக அவசியம். குறிப்பாக கோவிட் பெரும் தொற்றுக் காலத்தில் சோசலிச சமூகம்தான் மக்களை காப்பாற்ற  முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 

சமூக நெருக்கடியை தனது வழக்கமானவழியில் தீர்க்க முடியாத பொழுது முதலாளித்துவம் வலதுசாரி கோட்பாடுகளையும் வலதுசாரிக் தலைவர்களையும் உருவாக்குகிறது. சிறிது காலத்திற்கு வலதுசாரித் தலைவர்கள் மக்களை ஏமாற்றினாலும் இறுதியில் அவர்களும் தூக்கி எறியப்படுவார்கள். எதிர்காலம் சோசலிசத்துக்குதான் என்பதைகம்யூனிஸ்ட்டுகள் உறுதியாக நம்புகின்றனர். 21ஆம் நூற்றாண்டில் சோசலிசத்தை நிர்மாணிக்க கடும் சவால்களை எதிர்கொள்ளவேண்டும் என்பதை அறிந்து வைத்துள்ளனர். இந்த சவால்களை சந்திப்பதில் சோவியத் சோசலிச புரட்சியின் சாதனைகளும் படிப்பினைகளும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு செழுமையான வழிகாட்டுதலாக அமையும் என்பதில் இரண்டாவது கருத்து இருக்க இயலாது.

==அ.அன்வர் உசேன்==